* திணறும் மாவட்ட கலெக்டர்கள்
சென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 2,780 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் வேகமாக கொரோன பரவி வருவதால் அடிப்படை சுகாதார கட்டமைப்பு இன்றி மாவட்ட கலெக்டர்கள் திணறி வருகின்றனர். சென்னையில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தினசரி 1,000 முதல் 1,500 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை தவிர்த்து தமிழகத்தின மற்ற மாவட்டங்கள் எல்லாம் சேர்த்து தினசரி 2,000 முதல் 2,500 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
இதனால் மாவட்ட கலெக்டர்கள் திணறி வருகின்றனர். இதைப்போன்றுதான் நேற்றும் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 3,965 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,185 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 2,780 பேருக்கும் கொரோனா உறுதியானது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழகத்தில் நேற்று 3,965 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் தமிழகத்தில் வசிப்பவர்கள் 3,907 பேர். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் 58 பேர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,185 பேர், திருவள்ளூர் 346, மதுரை 277, செங்கல்பட்டு 237, தூத்துக்குடி 175, சேலம் 136, வேலூர் 135, குமரி 133, திருச்சி 128, காஞ்சிபுரம் 119, தேனி 119, கள்ளக்குறிச்சி 102, விருதுநகர் 94, ராமநாதபுரம் 81, நெல்லை 80, கோவை 71, சிவகங்கை 67, தென்காசி 65, தி.மலை 64, ராணிப்பேட்டை 50 உள்ளிட்ட 3,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழக பாதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 226. பாதிக்கப்பட்டவர்களில் 2,410 பேர் ஆண்கள். 1,555 பேர் பெண்கள். தற்போது வரை 81,992 ஆண்கள், 52,212 பேர் பெண்கள், 22 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 3591 பேர் குணமடைந்தனர். மொத்தமாக 85,915 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 46,410 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் நேற்று 69 பேர் இறந்தனர். இதில் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1898 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக இறந்தவர்கள் பட்டியல்
மாவட்டம் இறந்தவர்கள்
எண்ணிக்கை
சென்னை 26
மதுரை 10
காஞ்சிபுரம் 4
ராணிப்பேட்டை 3
திருவள்ளூர் 3
தூத்துக்குடி 3
திருச்சி 3
செங்கல்பட்டு 2
கோவை 2
தேனி 2
அரியலூர்,
கடலூர்,க.குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, திருப்பத்தூர், தி.மலை,திருவாரூர், நெல்லை, விருதுநகர் தலா 1