×

கிராமங்களில் கொரோனா அதிகரிப்பு கவலையளிக்கிறது....! வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும்; கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: கிராமப் புறங்களில் கொரோனா தொற்று பரவுவது கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்தவருகிறது. கொரோனா பரவலின் தொடக்கத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருந்தது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவும் வேகம் தீவிரமாகி உள்ளது.

இதைத்தவிர்த்து வேலூர், கோவை மாவட்டங்களிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா பரவல்கள் எண்ணிக்கை 200-ஐக் கடந்து, 200-ஐ நெருங்கியும் இருந்துவருகிறது. இந்தநிலையில், இதுகுறித்த கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : villages ,Corona ,state ,government , Corona, Government, Kamalhasan, Request
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு