அச்சிறுப்பாக்கத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது, வேன் பயங்கரமாக மோதியது. இதில், 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு, நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி தென் மாவட்டத்துக்கு புறப்பட்டது. அச்சிறுப்பாக்கம் அருகே சென்றபோது, திடீரென கனமழை பெய்ததால், டிரைவர் லாரியை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நிறுத்திவிட்டு, அதில் தூங்கினார்.

காலை சுமார் 6.30 மணியளவில், அவ்வழியாக, சென்னையில் இருந்து அதிவேகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற தனியார்  வேன், சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில், வேனின் முன்புறம் நசுங்கியது. வேனில் இருந்த விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்த மாசிலாமணி (30), டிரைவர் அருண்குமார் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அருண்குமாரின் அண்ணன் ஆனந்த் (32)   படுகாயமடைந்தார். தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த ஆனந்தை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: