தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கு ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் வழக்கின் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். டெல்லியில் இருந்து 8 அதிகாரிகளை கொண்ட சிபிஐ குழு தூத்துக்குடி வந்தநிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் விசாரணைக்காக வந்துள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ-யின் கூடுதல் டி.எஸ்.பி சுக்லா தலைமையில் அதிகாரிகள் குழு இன்று விமானம் மூலம் மதுரை வந்தனர். கார் மூலம் தூத்துக்குடி சென்ற அக்குழுவினர் விசாரணையைத் தொடங்கினர். சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 1ம் தேதி வரை விசாரணை நடைபெற்று இதுவரை 10 நபர்களை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இரண்டு பேர் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரிமார்க் செய்யப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, சாத்தன்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சாத்தான்குளம் தந்தை - மகன் சித்ரவதை கொலை வழக்கை விசாரிப்பதற்காக சிபிஐ குழுவினர் தூத்துக்குடி வந்தடைந்தனர். சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் சிபிஐ ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான, அனுராஜ் சிங், பவன்குமார், திவேதி, சைலேஷ் குமார், சுசில்குமார், அஜய்குமார், சச்சின், பூனம் ஆகிய 8 பேர் கொண்ட அதிகாரி குழுவினர் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
சி.பி.சி.ஐ.டி அலுவலகம் சென்ற அவர்கள் அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். முன்னதாக ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை தாக்கியதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் லத்தி உள்ளிட்ட ஆவணங்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு மாவட்ட தலைமை நீதிமன்ற ஹேமானந்தகுமார் முன்பாக சமர்ப்பிக்கப்பட்டது. சிபிஐ குழு வருகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.