புதுச்சேரி: புதுவையில் பல்கலைக்கழக அலுவல மேலாளர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். புதுவை மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது 553 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து புதுவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுவை மாநிலம் முழுவதும் வெளிநபர்கள் வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், அனைத்து பகுதியிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து, பரிசோதனையின்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் பல்கலைக்கழக அலுவலக மேலாளர் ரவி என்பவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது, சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது