15 நாட்களில் ஏன் திடீர் நிலைப்பாடு மாற்றம்? அத்தியாவசியப் பட்டியலிலிருந்து முகக்கவசத்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கேள்வி

டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து காக்கும் முகக்கவசம், சானிடைசர் போன்றவை அத்தியாவசியப் பட்டியலில் டிசம்பர் மாதம் வரை இருக்கும் என ஜூன் 16-ம் தேதி தெரிவித்த மத்திய அரசு ஏன் அடுத்த 15 நாட்களில் மாற்றிக்கொண்டது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது, அதாவது இந்தியாவில் கரோனாவால் 81 பேர் பாதிக்கப்பட்டிருந்தபோது, முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டு வந்து கடந்த மார்ச் 13-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

ஜூன் 30-ம் தேதி வரை இந்தப் பொருட்கள் அனைத்தும் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 7-ம் தேதி அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-பிரிவிலிருந்து இந்த இருபொருட்களும் நீக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். அவர் ட்விட்டரில் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி மத்திய அரசு பதிவிட்ட ட்விட்டரின் பதிவையும் குறிப்பிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில் “இந்த ஆண்டு இறுதிவரை சானிடைசர், முகக்கவசம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருக்கும் என ஜூன் 16-ம் தேதி அறிவித்திருந்து. ஆனால், ஜூலை 1-ம் தேதி அந்த இரு பொருட்களையும் பட்டியலில் இருந்து நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடைப்பட்ட 15 நாட்களில் என்ன மாற்றம் நடந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: