×

கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம்..: பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு-உ.பி.யில் கொடூரம்!

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா இருப்பதாக கூறி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 15ம் தேதியன்று, டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில், அன்ஷிகா யாதவ்(19) என்ற இளம்பெண் தனது தாயுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் அப்பெண்ணிடம் இருந்ததாக சக பயணிகள் சந்தேகமடைந்துள்ளனர். இதுகுறித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவல் தெரிவித்த தையடுத்து யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து அப்பெண்ணை வெளியே தூக்கி வீசியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பெண் அடுத்த 30 நிமிடங்களில் சாலையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது இதனை காலம் வெளியுலகிற்கு தெரியாத நிலையில், தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் உடனே உத்தரப்பிரதேச மாநில போலீசில் புகாரளித்துள்ளார். மேலும் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யாதது பற்றி விளக்கம் கேட்டுள்ளார். இந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து நேற்று விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இச்சம்பவம் தொடர்பாக  மதுரா போலீசில் புகாரளித்துள்ளனர். ஆனால் இது இயற்கையான மரணம் என்று கூறி அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக மதுரா எஸ்.எஸ்.பி கவுரவ் குரோவர்  பிரேத பரிசோதனையில் இறப்பிற்கான காரணம் மாரடைப்பு என்று தெரியவந்துள்ளது இருப்பினும் எஸ்.பி ஷிரிஷ் சந்திராவிடம் வழக்கு குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.


Tags : Coroner ,Delhi ,Agra Expressway , Corona, Bus, Teen, death, UP, Delhi
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு