ஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: குமரி மாவட்டத்தை சேர்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 750 மீனவர்கள், ஈரான் நாட்டில் சிக்கி தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இந்திய அரசு ஈரான் நாட்டிலிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஒவ்வொரு மீனவரும் பயணக்கட்டணம் உட்பட ரூ.10,000 செலவை ஏற்க வேண்டியிருந்தது. கப்பலில் இடமில்லை என்ற காரணத்தைக் கூறி 44 தமிழக மீனவர்களை அங்கேயே விட்டுவிட்டு கப்பல் ஈரானிலிருந்து புறப்பட்டுவிட்டது. நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான வெளியேற்ற முத்திரைப் பெற்ற பிறகு தமிழகம் திரும்ப இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட 44 மீனவர்களின் நிலை மேலும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

வெளியேற்ற முத்திரை பெற்றுவிட்டதால் அரசு ரீதியான உதவிகளை, ஈரான் அரசிடம் பெற இயலாமல் சென்றுவிட்டது. இந்த விடுப்பட்ட மீனவர்களை மீட்க விமானம் ஏற்பாடு செய்து அதற்கான பயணச் செலவை தமிழக மீனவர்களை ஏற்க கூறியுள்ளதாக தெரிகிறது. வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைக்கு சென்றவர்களிடம், நான்கு மாதங்களாக வேலையும், வருமானமுமின்றி தவித்து வருபவர்களிடம் இவ்வளவு பெரிய தொகையினை பயணக்கட்டணமாக கேட்பது வேதனைக்குரியது.

எனவே, ஈரானில் விடுபட்ட 44 தமிழக மீனவர்களை இந்திய அரசு தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வர மத்திய அரசுக்கு, தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமெனவும், அவ்வாறு இந்திய அரசு ஏற்க மறுக்கும் பட்சத்தில், தமிழக அரசு தன் செலவிலாவது மீட்க உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். மேலும், அதுவரை ஈரானில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்பாடு செய்து தருவதோடு, அவர்களை பிரிந்து எந்த வருமானமும் இல்லாமல் வாடும் மீனவ குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீட்டினை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: