பெரம்பூர்: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காசிமேடு மீன் மார்க்கெட் கூட்ட நெரிசலாக காணப்பட்டதால், அதை மூடினர். சென்னையில் பல மீன் மார்க்கெட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. அதன்படி, பட்டாளம் மீன் மார்க்கெட் மூடப்பட்டது. இந்நிலையில், அங்கு மீன் வியாபாரம் செய்த வியாபாரிகள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தற்போது, பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட யானைகவுனி சாலை சால்ட் கோட்ரஸ் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறி, நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தினமும் மீன் மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தினமும் 3 கன்டெய்னர்களில் மீன்கள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதை சென்னையில் உள்ள பல மொத்த மீன் வியாபாரிகள் வாங்கி சென்று தங்களது பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இரவு நேரத்தில் அந்த இடத்தில் குவிந்து, சமூக இடைவெளியின்றி மீன் வாங்குவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், இந்த இடத்திலிருந்து புளியந்தோப்பு கே.பி.பார்க் கொரோனா கேர் மையம் 300 அடி தூரத்தில்தான் உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் நள்ளிரவில் மீன் வியாபாரிகள் போடும் கூச்சலால் இவர்களது தூக்கம் பாதிக்கப்படுகிறது.