குறைந்தபட்சம் 6 மாதமாவது சொத்துவரி வசூலை தள்ளிவைக்க வேண்டும்: மாநகராட்சிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்பதை குறைந்த பட்சம் இன்னும் 6 மாதத்திற்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில், நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை. வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள்.

தங்கள் வாழ்க்கையை இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டுமோ என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் சொத்து வரி செலுத்துங்கள் என்று எச்சரிக்கை விடுவது மனித நேயமற்றது. ஊழல்களுக்கு - குறிப்பாக கொரோனா கால ஊழலுக்கு புகலிடமாக திகழும் சென்னை மாநகராட்சி- கமிஷன் வசூல் செய்வதற்கான டெண்டர்களை ரத்து செய்து நிதி நிலைமையை சரி செய்யலாம். ஆனால், அதுபோன்ற டெண்டர்களை அனுமதித்துக் கொண்டே- வருவாய் என்ற காரணம் காட்டி சொத்து வரியை உடனே செலுத்துங்கள் என்று சென்னை மாநகராட்சி கெடுபிடி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே, சென்னை மாநகராட்சியின் சொத்து வரி வசூல் அறிவிப்பை திரும்பப் பெற்று- இந்த வரி வசூலை குறைந்தபட்சம் இன்னும் 6 மாதத்திற்காவது தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: