செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் உள்ள தேசிய வங்கிகளில், சமூக இடைவெளியின்றி திரளும் மக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12நாட்களுக்கு, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மேலும், வங்கிகளும் மாத கடைசியில் 2 நாட்கள் மட்டும் செயல்பட்டன. இதனால், பணம் எடுக்க முடியாமல் இருந்தனர். கடந்த 1ம் தேதி முதல் சில தளர்வுகளுடன், மக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதித்தது. இதையடுத்து, பொதுமக்கள் வெளியே செல்ல துவங்கியுள்ளனர். வங்கி கணக்கு மூலம் அரசு ஊதியம், ஓய்வூதியம் பெறுபவர்கள் தினமும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று, பணத்தை எடுக்கின்றனர்ப. இதனால், அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.