செங்கல்பட்டு நகர அரசு வங்கிகளில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் உள்ள தேசிய வங்கிகளில், சமூக இடைவெளியின்றி திரளும் மக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12நாட்களுக்கு, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மேலும், வங்கிகளும் மாத கடைசியில் 2 நாட்கள் மட்டும் செயல்பட்டன. இதனால், பணம் எடுக்க முடியாமல் இருந்தனர். கடந்த 1ம் தேதி முதல் சில தளர்வுகளுடன், மக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதித்தது. இதையடுத்து, பொதுமக்கள் வெளியே செல்ல துவங்கியுள்ளனர். வங்கி கணக்கு மூலம் அரசு ஊதியம், ஓய்வூதியம் பெறுபவர்கள் தினமும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று, பணத்தை எடுக்கின்றனர்ப. இதனால், அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.

இதுபோன்று செல்லும் மக்கள், முக கவசம் சரிவர அணிவதில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை. குறிப்பாக செங்கல்பட்டு பாரத ஸ்டேட் வங்கியில் அதிகளவில் கூட்டம் சேர்கிறது. கொரோனா பரவல் காரணமாக, வாடிக்கையாளர்களை, வங்கி நிர்வாகம் உள்ளே அனுமதிக்காமல், வெளியிலேயே நிற்க வைத்து, டோக்கன் முறையில் உள்ளே அழைத்து பணம் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் சமுக இடைவெளியோடு வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு இடவசதி இருந்தாலும், கொளுத்தும் வெயிலில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் நிற்கும் அவல நிலை உள்ளது. அதில், பலர் முக கவசம் அணிவதில்லை. இதையொட்டி, அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை, வங்கி நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: