புதுடெல்லி: மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி திமுக உட்பட தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”மருத்துவக் கல்லூரிக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழகத்திற்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதம் வழங்க வேண்டும். இதில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கேட்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சலோனி குமார் தொடர்ந்த வழக்கு என்பது வேறு ஆகும். அதனால் எங்களது மனுவை அதோடு ஒப்பிடாமல் தனியாக எடுத்து விரைந்து விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. இ
தேபோன்ற கோரிக்கை கொண்ட மனுவை தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் டி.ஜி.பாபு என்பவரும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மேற்கண்ட இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘வழக்கு குறித்து ஆய்வு மேற்கொள்ள கூடுதல் ஆவணங்கள் தற்போதைய பதிவில் இல்லை. இதில் நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கின் சாராம்சம் மற்றும் சலோனி குமாரின் வழக்கின் சாராம்சமும் ஒன்றுபட்டதா? என்பது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும்’’ என கூறி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.