கேரள தங்க ராணி சொப்னா அதிகாரிகளை வலையில் வீழ்த்தியது எப்படி?: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சொப்னா, அரசு அதிகாரிகளை தனது வலையில் எப்படியெல்லாம் வீழ்த்தி உள்ளார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது அந்தரங்க புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. திருவனந்தபுரத்தில் ரூ.13.5 கோடி மதிப்பு தங்கம் கடத்தல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த சரித்குமார் கைதானார். விசாரணையில், தூதரக நிர்வாக செயலாளராக பணியாற்றிய சொப்னா சுரேஷுக்கு கடத்தலில் பங்கு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள சொப்னா பற்றி தினசரி பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின்றன.

சொப்னா சுரேஷ் 4 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தில் நிர்வாக செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நான்கு ஆண்டுகளில் இவர் கேரள அரசின் முக்கிய அதிகாரிகளுடனும் அரசியல் பிரமுகர்களுடனும் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இதுபோல் தூதரகத்திலும் சர்வ வல்லமை படைத்தவராக வலம் வந்தார். இதை பயன்படுத்தி தான் தங்கம் கடத்தலில் இவர் ஈடுபட்டுள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்த இவர் இரண்டாவது ஒருவரை திருமணம் செய்தார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். முதல்வர் நடத்தும் அரசு கூட்டங்களில் கூட தூதரக உயர் அதிகாரிபோல் இவரும் பங்கேற்று வந்துள்ளார்.

இந்தளவுக்கு அரசு அதிகாரிகளை எப்படி அவர் தனது வலையில் வீழ்த்தினார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவர் தனது வீட்டிலும், தனக்கு சொந்தமான சொகுசு பங்களாக்களிலும் அடிக்கடி பார்ட்டி நடத்தி உள்ளார். அதில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு உயர் அதிகாரிகளை அழைத்துள்ளார். அதில் அவர்களுக்கு வேண்டிய சகலத்தையும் சொப்னா செய்து தந்துள்ளார். இதற்காக தன்னிடம் சில இளைஞர்களையும், இளம்பெண்களையுமே வேலைக்கு வைத்திருந்துள்ளார்.

இவரது மது விருந்துக்கு பல துறை உயர் அதிகாரிகள் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலமாகத்தான் குறுகிய காலத்தில் முதல்வர், சபாநாயகர் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமானார். தூதரக அலுவலகத்தில் கூட இவர் முடிசூடா ராணியாக வலம் வந்தார். தூதரக அலுவலகத்தில் இவருக்கு பெரும் மரியாதை அளிக்கப்பட்டது. இவர் வரும்போதும் செல்லும்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் சல்யூட் அடிப்பார்கள்.

ஒருமுறை சல்யூட் அடிக்காத போலீசாரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று கமிஷனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தூதரகம் நடத்தும் விழாக்களில் இவர்தான் முக்கிய பொறுப்பாளராக இருந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நெருக்கம் என்பதால் அவர்களை வைத்து தனக்கு வேண்டியவற்றை சாதி த்து வந்துள்ளார். தூதரக தலைமை அதிகாரி இவருக்கு மிக நெருக்கம் என்பதால், அதை பயன்படுத்தியும் பல்வேறு காரியங்களை நடத்தியுள்ளர். இதற்கிடையே இவரது ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை வைத்தும் அவர் அதிகாரிகளை மயக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

போலீஸ் உயர் அதிகாரிகளுடனும் அவருக்கு தொடர்பு இருப்பதாலேயே கேரள போலீஸ் உதவியை சுங்க இலாகா நாடவில்லை. மத்திய உளவுத்துறையான ஐபியுடன் இணைந்து சொப்னா சுரேசை வலைவீசி தேடி வருகின்றனர். சுங்க இலாகாவின் 2 குழுக்கள் திருவனந்தபுரத்திலும், 3 குழுக்கள் கொச்சி பகுதிகளிலும் தேடி வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு மேலாக சொப்னா சுரேஷை பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடியும் அவர் சிக்கவில்லை. தங்க ராணி சொப்னா விவகாரத்தால் கேரள முதல்வர் பினராய் விஜயன் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்த விவகாரத்தில் நான் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் பதவி விலக வேண்டிய எந்த அவசியமும் இல்லை’’ என்றார்.

* ஜாமீன் கோரி ஆன்லைனில் மனு

இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு ஆன்லைன் மூலம் கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி சொப்னா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், தங்கம் கடத்தலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசாரணை அதிகாரிகளிடம் கூற என்னிடம் எந்த விளக்கமும் இல்லாததால் தான்நான் தலைமறைவாக உள்ளேன். எனவே முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories: