போலி இ-பாஸ் முறைகேடு அரசு அதிகாரி உட்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போலி இ-பாஸ் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி உட்பட 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுபடுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் தமிழக அரசு இ-பாஸ்  வழங்கி வருகிறது. அந்த இ-பாஸ் திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கும், அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிலர் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்குவதாக புகார் எழுந்தது.

அந்த தகவலின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சென்னை பேசின் பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த உதயக்குமார் மற்றும் கோபி, மனோஜ்குமார், டிரைவர் வினோத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் குமரன், மனோஜ்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், ஏற்னவே தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயக்குமார், டிரைவர் வினோத்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், போலி இ-பாஸ் வழங்கியதில் மனுதாரர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்களில் ஒருவரான டிரைவர் வினோத்குமார், மற்றொரு மனுதாரரான இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயக்குமார் மூலம் சட்டத்துக்கு புறம்பாக இ-பாஸ் பெற்று பயன் அடைந்துள்ளார். அரசு அலுவலர்கள், டிராவல் ஏஜென்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து அரசு ஆவணங்களை பயன்படுத்தி ரகசியமாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: