சென்னை : சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 72,500 ஆக உள்ளது. 1,146 பேர் உயிரிழந்த நிலையில், 49,587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21,766 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,320 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 57.98 சதவீதம், பெண்கள் 42.02 சதவீதம். நேற்று மட்டும் சென்னையில் 8,128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
* அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 979 பேரும், மணலியில் 429 பேரும், மாதவரத்தில் 778 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
* தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,628 பேரும், ராயபுரத்தில் 1,741 பேரும், திருவிக நகரில் 1,778 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* அம்பத்தூர் மண்டலத்தில் 1,306 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 2,511 பேரும், தேனாம்பேட்டையில் 2,118 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,657 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* வளசரவாக்கத்தில் 1,049 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 799 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,412 பேரும் பெருங்குடியில் 798 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 463 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.