அண்ணாநகர்: வீடு புகுந்து பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த கும்பலை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஐயப்பன்தாங்கல் திருவள்ளுவர் தெரு, சின்ன கொளுத்துவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (29). பிரபல ரவுடி. இவர் மீது கோயம்பேடு, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்ரீகாந்த், ஆக்டிங் கார் ஓட்டுனராக வேலை செய்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கோயம்பேடு அன்னை சத்யா தெருவில் அவரது தந்தை பாலசுப்பிரமணி வசிக்கிறார். அவரை சந்திக்க ஸ்ரீகாந்த் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில், ஸ்ரீகாந்த் அவரது நண்பர் வடபழனியை சேர்ந்த கார்த்திக்குடன் தந்தை வீட்டிற்கு நேற்று முன்தினம் மது அருந்தச் சென்றார். மது அருந்தி கொண்டு இருக்கும்போது பாலசுப்பிரமணி கடைக்கு சென்று உணவு வாங்கி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் உணவு வாங்கி வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்ரீகாந்த் தலை, கை, கால், வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.