புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு 1151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுவை கவர்னர் மாளிகையில் 19 வயதேயான உதவியாளருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக சளி எடுக்கப்பட்டுள்ளது. 2ம் நிலை தொடர்பில் இருந்த கவர்னர் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதுவரை அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கவர்னர் மாளிகையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 48 மணி நேரம் மூடி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கவர்னர் கிரண்பேடி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.