சிபிஎஸ்இ பாடங்களை குறைக்க வேண்டுமே தவிர கல்வித்துறையில் இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை புகுத்தக்கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: சிபிஎஸ்இ பாடங்களை குறைக்க வேண்டுமே தவிர, கல்வித்துறையில் இந்துத்துவ சனாதனக் கோட்பாடுகளை புகுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருக்கிறது.

சிபிஎஸ்இ 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மற்றும் மதச் சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன. மேலும், “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்?, இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களையும் நீக்கி உள்ளது. பாடத் திட்டம் குறைப்பு எனும் பெயரில் பாஜ அரசு திட்டமிட்டு மேற்கண்ட பாடங்களை நீக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

கொரோனா பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மத்திய பாஜ அரசின் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. பாஜ தங்களது சொந்த விருப்பங்களை திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தியாவில் மக்களாட்சி அபாய கட்டத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகளாகும். பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழித்தால் இந்தியா எனும் அமைப்பே கேள்விக்குறியாகிவிடும். கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, சிபிஎஸ்இ பாடங்களை குறைக்க வேண்டுமேயொழிய, பாஜ அரசு கல்வித் துறையில் இந்துத்துவ சனாதனக் கோட்பாடுகளைப் புகுத்தக்

கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: