4 மாத யூனிட்டை சேர்த்து கணக்கிட்டதால் சிக்கல் மின்கட்டண வசூலை எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்தது. அதன் பின்னர் மின்சாரம் கணக்கீடு செய்யும்போது, 2 இரு மாதங்களுக்கும் சேர்த்து (4 மாதங்களுக்கான யூனிட்) மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு திணறி வரும் சாதாரண, நடுத்தர மக்களுக்கு இந்த மின் கட்டண முறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மின்சார வாரியத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ‘‘மின் கட்டண கணக்கீடு முறையில் எந்த வித சட்ட விதி மீறலும் இல்லை. அனைத்து தரப்பு  உபயோகதாரர்களுக்கு ஏற்ப கட்டணம் வகுத்து வசூலிக்கபடுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது.  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மத்திய மின் சட்டம் பிரிவு 43(3) ல் சொல்லப்பட்டுள்ள மின் உபயோக கணக்கீட்டிற்கு ஏற்பதான் பணம் வசூலிக்க வேண்டும். நான்கு மாதத்திற்கு ஒரு முறை அளவீடு எடுத்து அதை இரண்டாக பிரிப்பதற்கு அதிகாரம் இல்லை. இதனால் மின் நுகர்வோர் பல மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 4 மாதத்திற்கு ஒரு முறை அளவீடு எடுத்து அதை இரண்டாக பிரிப்பதற்கு அதிகாரம் இல்லை.

Related Stories: