ஐகோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டம் நலவாரிய பதிவை புதுப்பிக்காதோருக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை

சென்னை: ஊரடங்கின் காரணமாக நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்  பிரகாஷ் ஆஜரானார். கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் உள்ளனர்.

குறைந்தபட்ச நிவாரணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்  என்று தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், நேரடியாக வராமல் மறைமுகமாக இதுபோல் கேட்கிறார்கள். நலவாரியத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு தான் நிவாரணம் வழங்கப்படுகிறது. நலவாரியத்தில் உறுப்பினர் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றார். இதையடுத்து வழக்கை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Related Stories: