ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர் செல்வராஜ் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (42). இவர் அதேபகுதியில் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், நேற்று மாலை மகேந்திரன் வீட்டிற்கு அருகே ஒரு ஆட்டோவில் தண்ணீர் கேன் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, 4 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலிடமிருந்து தப்பி மகேந்திரன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தியது.
இதனையடுத்து, அவர் அதே பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்குள் உயிரைக்காப்பாற்ற புகுந்தார். அதைப் பார்த்த அந்த கும்பல், மளிகைக்கடைக்குள்ளும் புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு தகவல்கொடுத்தனர். மேலும் உறவினர், பொதுமக்கள் மகேந்திரனை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.