பெண் டாக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா: அச்சத்தில் பொதுமக்கள்

மதுராந்தகம்: மதுராந்தகம், கருங்குழி ஆகிய பகுதிகளில் பெண் டாக்டர் உள்பட 3 டாக்டர்கள் என மொத்தம் 16 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுமார் 25 வயதுள்ள ஒரேயொரு பெண் டாக்டர் பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. மற்றொரு மருத்துவ பணியிடம் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த ஒரே டாக்டரை நம்பி சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பெண் டாக்டருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில், நேற்று காலை கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல், மதுராந்தகத்தில் கிளினிக் நடத்தி வரும் சுமார் 40 வயதுள்ள டாக்டருக்கும், அவரது மனைவிக்கும் நேற்று கொரோனா உறுதியானது. அவர்கள், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, அதே பகுதியில், கிளினிக் நடத்தி வரும் சுமார் 43 வயதுள்ள ஆண் டாக்டருக்கும் கொரோனா உறுதியானது. அவரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மதுராந்தகத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது 70 வயது தாய், 20 வயது மகன் ஆகியோருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கருங்குழியில் ஒரு பெண் டாக்டர், மதுராந்தகத்தில் 2 டாக்டர்கள் உட்பட மொத்தம் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மதுராந்தகம் நகராட்சியில் இதுவரை 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தலைமை மருத்துவர் சுகுமார் உள்பட, 6 பேர் இறந்துள்ளனர். 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றனர்.

Related Stories: