சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளத்தையும், TNPFCL என்ற கைப்பேசி செயலியையும் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசுக்கு முழுவதும் சொந்தமான பொதுத்துறை நிறுவனமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாக (வைப்பீடு) 1991-ஆம் ஆண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பொதுமக்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வைப்பீடுகள் மூலம் நிதி திரட்டி வருகிறது. மேலும், இந்நிறுவனம் பொது நிதி நிறுவனமாக பத்து இலட்சத்திற்கும் மேலான வைப்பீட்டாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியை அளித்து வருகிறது.
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக, அதன் செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில், http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளமும், TNPFCL என்ற கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய வலைதளத்தையும், கைப்பேசி செயலியையும் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும், இப்புதிய வலைதளத்தின் மூலமாக முதலமைச்சர் பழனிசாமி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திலுள்ள 8,000 பயனாளிகளுக்கு 30 கோடி ரூபாய் நிதியை வழங்கினார். இப்புதிய வலைதளத்தின் மூலம், வைப்பீட்டாளர்கள் வைப்பீட்டு கணக்கை துவக்குதல், புதுப்பித்தல், முதிர்வடைந்த வைப்பீட்டு தொகையை பெறுதல், வைப்பீட்டு தொகையின் மூலம் கடன் பெறுதல், Nominees பெயர் மாற்றம் செய்தல், வங்கி விவரங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.