சென்னை: அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபியாக பதவி ஏற்ற ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏ.கே.விஸ்வநாதன் சென்னை காவல் ஆணையராக பதவி வகித்தகாலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். தொழில் நுட்பங்களையும் புகுத்தினார். குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் சென்னை முழுவதும் ‘மூன்றாவது கண்‘ என்ற பெயரில் 10 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என, 2.5 லட்சத்துக்கும் அதிகமான கேமராக்களை நிறுவ நடவடிக்கை எடுத்தார். மேலும், பல சிறப்பான திட்டங்களையும் கொண்டு வந்தார்.
தமிழகத்திலேயே சிறந்த காவல் ஆணையராகவும் விருது பெற்றார். இந்நிலையில், கடந்த வாரம் தமிழகத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தமிழக அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டது. தற்போது அந்த பதவியில் அவர் இருந்து வருகிறார். இந்தநிலையில், ஏ.கே.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ளார்.