சென்னை: சென்னையில் ஊரடங்கு காரணமாக 107 நாட்கள் இடைவெளிக்கு பிறகு சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்பை தொடர, தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்குகின்றன. சமூக இடைவெளியை கடைபிடித்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என மொத்தம் 60 பேர் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். அரசு விதித்துள்ள 11 வகையான நிபந்தனைகளை முழுமையாக கடைபிடித்து முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா, விஜயகுமார் தயாரிப்பில் சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் கண்மணி தொடரின் படப்பிடிப்பு போரூர் டி.ஆர். கார்டனில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பாக மூன்று வேலையும் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், படப்பிடிப்புக்கு வரும் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னையில் முதல்கட்டமாக இன்று 5 சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.