கோவை : கொரோனா தொற்று தாக்காமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்தான ஆயுஷ் குடிநீரை கோவை மாவட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் தயாரித்துள்ளனர். கொரோனா வைரஸைக் கொல்வதற்கோ அல்லது அக்கிருமி உடலில் தொற்றாமல் இருக்க தடுப்பு மருந்தோ இல்லாத நிலையில் பல நாடுகளும் தங்களது பாரம்பரிய மருத்துவ முறையிலான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவிலும் ஆயுஷ் அமைச்சகம் தனது சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா-இயற்கை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் கொரோனாவுக்கு எதிரான பல ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சாய் கிராமம் சேவா சமிதி அறக்கட்டளையின் ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவர்கள், ஆயுஷ் குடிநீரை தயாரித்துள்ளனர்.இந்த ஆயுஷ் குடிநீர், கொரோனா தொற்று தாக்காமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.அன்றாட நம் வீட்டில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான லவங்கப்பட்டை, சுக்கு, மிளகு, துளசி உள்ளிட்டவைகளின் கூட்டு கலவையை ஆயுஷ் குடிநீர் என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர். இந்த குடிநீரை தினமும் காலை மாலை என இரு வேளை குடிப்பதன் மூலம் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீடுகளில் நுண் கிருமிகள் இருந்தால், அவற்றை அழிக்கும் தூபம் ஆயுர்வேத பவுடர் ஒன்றையும் ஆயுர்வேத மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.