புதுடெல்லி: கிழக்கு லாடக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதன் காரணமாக இருநாடுகளும் எல்லையில் படையை குவித்தன. இந்நிலையில், எல்லைப்பிரச்னை தொடர்பாக சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் வீ, இந்தியா தரப்பில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தினார்கள். தொலைபேசி மூலமாக நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு படைகளும் எல்லையில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இருநாட்டு படைகளும் நேற்று முன்தினம் முதல் திரும்ப தொடங்கின. இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்தவற்றுள் சரியானதும் தவறானதும் மிக தெளிவாக உள்ளது. பிராந்திய ஒருமைப்பாட்டையும் எல்லைப்பகுதிகளில் அமைதியையும் சீனா தொடர்ந்து பாதுகாக்கும்,’’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.