சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை நடத்த முடியவில்லை. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இறுதி பருவத் தேர்வுகளை எழுத எந்த மாணவரும் தயாராக இல்லை. ஆனால், உயர்கல்வித்துறை இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறி, அதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக மராட்டியம், மத்தியபிரதேசம், பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் அரியானா ஆகிய 7 மாநிலங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன.