சென்னை: சென்னை விரும்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.என்.ரவி. இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இதற்காக, விரும்பாக்கம் பகுதி முழுவதும் நேற்று முன்தினம் இரவு எம்எல்ஏவின் ஆதரவாளர்களும், அதிமுக பிரமுகர்களான கணேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் தடையை மீறி சாலைகளில் பேனர் வைத்துள்ளனர். தகவல் அறிந்த விரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேனரை அகற்றும்படி கூறினர்.
ஆனால், பேனர் அகற்றப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே, உதவி ஆய்வாளர் இசைவாணி அளித்த புகாரின்படி, அதிமுக பிரமுகர்களான கணேஷ் மற்றும் ரமேஷ் மீது நீதி மன்ற தடையை மீறி, பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்ததாக வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, போலீசார் சாலையோரம் வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்றினர். அதிமுக பிரமுகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் விரும்பாக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.