தமிழகத்தில் சரக்கு வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி இழப்பு ஏற்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

சென்னை : தமிழகத்தில் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால் அரசுக்கு  ரூ1,724 கோடி இழப்பு ஏற்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், சரக்கு கிடைக்காமல், பெரும்பாலான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், 2020 ஏப்ரல் முதல், செப்டம்பர் வரை, மோட்டார் வாகனங்களுக்கு சாலைவரி வசூலிக்கக்கூடாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம், அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், வாகனங்களுக்கு சாலை வரி செலுத்த, ஜூன் 30 வரை மட்டும் தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனை எதிர்த்து கடந்த மே மாதம் சம்மேளன மாநில தலைவர் முருகன் வெங்கடாசலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்மேளனம் தரப்பு சார்பில்  வழக்கறிஞர் வாதத்தை கேட்ட நீதிபதி ரவிச்சந்திர பாபு, அரசு தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, தமிழகத்தில் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால் அரசுக்கு  ரூ1,724 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தது. மேலும் அதில் ஊரடங்கின் போது சரக்கு வாகனத்திற்கு தடை விதிக்காததால் வரி விலக்கு என்ற கேள்வியே எழவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: