கர்நாடகாவில் சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கொரோனா: துமாகூரில் அமைச்சர் ஜேசி மதுசாமி கவலை

துமாகூர்: கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது என கர்நாடக அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தம் 25,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். 14,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 401 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,843 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என கூறினார். தொற்று அதிகரித்து வந்தாலும் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். துமாகூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம் என துமாகூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மதுசாமி செய்தியாளர்களிடம் கூறினார். அதை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், மாவட்ட அதிகாரிகளுக்கு அது கடினமான கட்டத்தை எட்டியுள்ளது என தெரிவித்தார். எங்கோ நிலைமை கைமீறி சென்றுவிட்டது எனவும் கூறினார்.  முன்னதாக, மாநில முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று கூறிய நிலையில், அமைச்சர் மதுசாமி முரண்பட்ட கருத்தை வெளிப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: