செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 144 தடையை மீறியாதக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால், காவல் நிலையத்தில் சமூக இடைவெளியின்றி கூட்டம் அலைமோதியது. இதையொட்டி, கொரோனா பாதிக்கும் அபாயம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த 19ம் தேதி முதல் செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 28 காவல் நிலையங்களின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்த போலீசார், தேவையில்லாமலும்,உரிய ஆவணங்கள் இல்லாமல் சுற்றிய வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், வழக்கு பதிந்தனர். தொடர்ந்து 12 நாட்களில், பைக், ஆட்டோ, கார், லாரி உள்பட மொத்தம் 34555 வாகனங்கள் பறிமுதல் செய்து, 37,601 வழக்குகள் பதிவு செய்து, 37681 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. சில காவல் நிலையங்களில் இடபற்றாக்குறையால், தனியார்பள்ளி மற்றும் திருமண மண்டப வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப பெறுவதற்காக, அதன் உரிமையாளர்கள் செங்கல்பட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் திரண்டனர். ஆனால், காவல் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கூட்டம் அலைமோதியது. இதனை போலீசாரும் கண்டும் காணாமல் இருந்தனர். இதில், பலருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பறிமுதல் வாகனங்களை பெற ஒரே நேரத்தில் அனைவரும் காவல் நிலையத்தில் குவிந்ததால், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது.