×

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 8,374 பேர் கைது, இதுவரை 6,21,384 வாகனங்கள் பறிமுதல்...: தமிழக காவல்துறை தகவல்!

சென்னை: இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது  இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால் ஜூன் 31-ம் தேதி வரை 6-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8,13,877 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,374 பேர் கைது செய்யப்பட்டு  விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 6,21,384 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,507 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 7,42,594 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 7,984 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரையில், ரூ.17,21,16,131 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.6,81,300 வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு  வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின்  ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Curfew, vehicle confiscation, Tamil Nadu police
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...