சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு

* மீன் கடைகள் இயங்க அனுமதி

* சென்னையில் ஓட்டல், டீக்கடைகளில் பார்சலுக்கு அனுமதி

* அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

* முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் சென்னை மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து  மற்ற இடங்களில் கீழ்க்கண்டவை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* அனைத்து தொழிற்சாலைகள் 100 சதவீத ஊழியர்களுடன் பணிபுரியலாம்.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 100 சதவீத பணியாளர்களில் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் வீடுகளில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தலாம்.

* அனைத்து தனியார் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அதே நேரத்தில் வீடுகளில் இருந்து பணிபுரிவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

* 50 சதவீத ஊழியர்களுடன் நகை, ஜவுளி கடைகள் இயங்கலாம். டீ கடை மற்றும் உணவு மற்றும் காய்கறி, மளிகை கடை காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்.

* டாஸ்மாக் கடை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம்.

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

* மீன் ஸ்டால், சிக்கன் மற்றும் மற்ற இறைச்சி கடை, முட்டை கடை சமூக இடைவெளி கடைபிடித்து செயல்படலாம்.

* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.

* தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை காவல் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது அதன்படி:

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

 எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கலாம்.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம்.

*  முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

*  மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பார்சல் மட்டுமே வழங்கப்படும். உணவு டெலிவரி செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

* காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

* தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் ஊழியர்கள் அனுமதி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து அரசு அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்களுடன் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சிமுறையில் பணிக்கு வர வேண்டும். அதாவது, முதல் இரண்டு நாள் ஒரு பேட்ஜ், அடுத்து வரும் 2 நாட்கள் ஒரு பேட்ஜ் என்கிற அடிப்படையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: