தினமும் டன் கணக்கில் குப்பைக்கு போகும் காய்கறிகள் வெண்டை, கத்தரிக்காய் மூட்டை ரூ.80க்கு விற்றும் வாங்க ஆளில்லை

* திணறடிக்கும் திருமழிசை மார்க்கெட்

* மொத்த வியாபாரிகள் மனக்குமுறல்

சென்னை: திருமழிசை காய்கறி மார்க்கெட்டில், மூட்டை ரூ.80க்கு விற்பனையாகும் வெண்டைக்காய், கத்தரிக்காய்களையும், ரூ.100க்கு விற்கும் முள்ளங்கி மூட்டைகளையும் கூட வாங்க ஆட்கள் இல்லாமல், தினமும் டன் கணக்கில் காய்கறிகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. கோயம்பேடு காய்கறிச் சந்தை, கொரோனா நோய்த் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் பூ, பழ சந்தைகளை கடந்த மே 11ம் தேதி மாதவரம் புதிய பஸ் நிலையத்திற்கும், காய்கறி மார்க்கெட்டை பூந்தமல்லி அடுத்த திருமழிசைக்கும் மாற்றி அமைத்தது.

நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோயம்பேட்டிலிருந்து திருமழிசை சாட்டிலைட் டவுன்ஷிப் பகுதியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சில்லறை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சீசன் நேரம் என்பதால், திருமழிசை மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகமாகியிருக்கிறது. ஆனால், வரத்திற்கேற்ப விற்பனை இல்லை. இதனால் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. முள்ளங்கி, கேரட், கத்தரிக்காய், வெண்டைக்காய் என அனைத்து காய்கறிகளின் விலையும் சந்தையில் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், வாங்க ஆள் இல்லை.

திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதது, ஓட்டல்கள் அதிக அளவில் காய்கறிகளை கொள்முதல் செய்வதில்லை. இதனால் மொத்த வியாபாரிகளும் குறைந்த அளவில்தான் காய்கறிகளை வாங்குகிறார்கள். அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், டன் கணக்கான காய்கறிகளை தினமும் கீழே கொட்டிவிட்டுச் செல்கின்றனர். திருமழிசை காய்கறி விற்பனை குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘சந்தையில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை. அதனால் அவர்களின் வியாபாரம் எங்களுக்கு சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. மொத்த வியாபாரிகளும் பெரும்பாலானவர்கள் இங்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் முன்பு மாதிரி வாங்குவதில்லை.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆகும் வியாபாரத்தில் பாதிகூட இங்கு இல்லை. தினமும் முள்ளங்கி, கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரை வகைகள், புதினா என அனைத்து காய்களையும், மூட்டை மூட்டையாக குப்பையிலே கொட்டிக்கொண்டு இருக்கிறோம். சில்லறை வியாபாரிகளை அனுமதித்தால் கூட போதும். கீழே கொட்டும் காய்கறிகளை அவர்கள் வாங்கி செல்வார்கள். முள்ளங்கி மூட்டை 100 ரூபாய்க்கு விற்றும் வாங்க ஆள் இல்ல. வெண்டைக்காய், கத்தரிக்காய் ஆகியவை மூட்டை 80 ரூபாய்க்கு விற்றும் வாங்க ஆள் இல்லை. இதனால் இந்த காய்கறிகளை குப்பையிலே கொட்டி விட்டு போகப்போகிறோம். வேறு வழி இல்லை. இந்த சந்தையில ஒரு குளிர்பதனக் கிடங்கு கூட இல்லை. அப்புறம் பெய்யும் பருவ மழையில் நாங்கள் எங்கு காய்கறியை வைப்பது. இங்கு நடக்கும் வியாபாரத்தில் போட்ட அசல் எடுப்பதே கஷ்டமாக உள்ளது’’ என்றனர்.

Related Stories: