மங்களூரு புறநகரில் நிலச்சரிவில் சிக்கி அண்ணன், தங்கை பலி: கனமழையால் சோகம்

மங்களூரு: மங்களூருவில் பெய்த கனமழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு வீடுகள் மண்ணில் புதைந்தது. இச்சம்பவத்தில் அண்ணன், தங்கை இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்கனரா மங்களூரு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் பலத்த காற்றுடன் பெய்த கனமழை பெய்தது. அப்போது, புறநகரில் உள்ள குருபுரா கிராமத்தில் மண் சரிவு ஏற்பட்டு நான்கு வீடுகள், ஒரு டிராக்டர், இரண்டு பைக், ஒரு ஆட்டோ மண்ணில் புதைந்தது. அதேபோல், விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அண்ணன், தங்கையான சப்தான் (16) மற்றும் சஹலா (10) ஆகியோர் மண்ணில் சிக்கி கொண்டனர். இது குறித்து கதிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் வந்த போலீசார் மண் சரிவில் சிக்கிய சடலங்களை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். புதையுண்ட வீட்டில் 6 பேர் இருந்துள்ளனர். மண்சரிவு ஏற்பட்ட போது அனைவரும் வெளியில் ஓடி வந்துள்ளனர். அண்ணன், தங்கை இருவரும்  தூங்கி கொண்டிருந்ததால் அவர்கள் மண்ணில் சிக்கியதாக கூறப்படுகிறது. பலமணிநேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: