சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத்தை அரசே குறைக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. அரசு மருத்துவர்கள் அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்காக 2009ம் ஆண்டில் தொடங்கி 2017ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தினர். அவர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தலாம் என்று உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கண்டிப்புடன் ஆணையிட்ட பிறகு தான் 2018ல் ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட்டது.