அடுத்த ஜூன் மாதம் வரை இலவச உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் ஆகியவற்றில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் நிலவரம் மோசமாகி வருகிறது. இந்த நெருக்கடியான காலத்தை சமாளிக்க குடும்ப அட்டை பெற்றிருப்போர் அனைவருக்கும் வருகிற நவம்பர் மாதம் வரை பொது விநியோகத்துறை மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் உணவுப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆனால், தமிழக முதல்வர் இந்த ஜூலை மாதம் மட்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் குடும்ப அட்டை இல்லாதோர் குறித்தும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் கவலைகள் குறித்தும் கருத்தில் கொள்ளவில்லை. முன்னர் “மூன்று நாளில் கொரோனா பிரச்னைக்கு தீர்வு” வரும் என அறிவித்தது போல், இந்த மாத இறுதியில் கொரோனா நெருக்கடி முடிந்து விடும் என நம்புகிறாரா, மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி கொரோனா தொற்று பல மாதங்கள் நீடிக்கும் என தெரிகிறது. இந்த நிலவரத்தை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை அடிப்படையில் தற்காலிக குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: