திருக்கழுக்குன்றம் - திருப்போரூர் பகுதிகளில் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு கொரோனா: குடிமகன்கள் அச்சம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அந்த குடைகளில் மதுபானங்கள் வாங்கி குடித்த குடிமகன்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். திருக்கழுக்குன்றத்திலுள்ள கருங்குழி சாலை பகுதியில் டாஸ்மக் கடை ஒன்றி இயங்கி வருகின்றது. இந்த கடையில் செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியை சேர்ந்த சூப்பர்வைசருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு  கொரோனா தொற்று உறுதியானது. அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. சூப்பர்வைசருக்கு கொரோனா உறுதியானதால் அந்த கடையில் வேலை பார்க்கும் விற்பனையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 2 விற்பனையாளர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் பெருந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் விற்பனையாளராக வேலைப் பார்த்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இருமல், காய்ச்சல் தொடர்ச்சியாக இருந்துள்ளது.

அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடையில் அவருடன் வேலை பார்க்கும் இதர ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால் குடிமகன்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: