கொரோனா பாதித்து இறந்தவர் உடல் பிபிஇ கிட்டில் வைத்து வீச்சு: மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ராணிபென்னூரு தாலுகா மருத்துவமனை அருகே பி.பி.இ கிட்டை கொண்டு இறந்த உடலை கட்டி வைத்து வீசிவிட்டு சென்ற மர்ம ஆசாமிகளை  போலீசார்  வலைவீசி தேடி வருகின்றனர். ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூரு தாலுகா மருத்துவமனை அருகே பி.பி.இ. கிட்டால் இறந்தவரின் சடலம் மூடி வீசி எறியப்பட்டுள்ளது. பொது இடத்தில் சடலத்தை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்ததுடன், இந்த காட்சியை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வைரலாக்கிவிட்டனர். இது குறித்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிலர் கூறுகையில், ராணிபென்னூரு, மாருதி நகரை சேர்ந்த 45 வயது நபர் கடந்த மாதம் 28ம் தேதி காய்ச்சல் காரணமாக தாலுகா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது டாக்டர்கள் இவருக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அதில் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழுடன் வந்த இவர் மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தார். நேற்று முன்தினம் இவர் இறந்துவிட்டார். இதையறிந்த மருத்துவமனை நிர்வாகம் பிபிஇ கிட் கொண்டு அவரது உடலை கட்டிவீசி எறிந்துள்ளது என்றனர். கொரோனா தொற்று பாதித்து இறந்தவரின் உடலை பி.பி.இ. கிட் கொண்டு கட்டி வீசி எறிந்திருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பொது இடத்தில் கொரோனா தொற்று பாதித்து இறந்தவரின் உடலை வீசி எறிந்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: