எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை சோதிக்கும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்கு தொற்று உறுதி

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,73,165-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,850 பேர் புதிதாக  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 19,268 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 613   உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,09,083 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,856 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவர்கள், போலீசார் என பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருபவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வந்தாலும், பொதுப்பணிகளில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் ஆளாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 33 பேர் குணமடைந்து திரும்பிய நிலையில், இதுவரை 817 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது, 526 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் வீரர்களை தனிமைப்படுத்துவதற்கான மையங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: