×

திருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல் அளித்த நிலையில் அவகாசம் கேட்கும் சி.ஐ.எஸ்.எப்!

புதுடெல்லி: திருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என சி.ஐ.எஸ்.எப். கூறியுள்ளது. கடந்த டிசம்பரில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019 அமல்படுத்தப்பட்டது. கல்வி, சொத்துரிமை உள்ளிட்ட பல விஷயங்களில் திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாட்டை இச்சட்டம் தடை செய்தது. இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் உள்ள 5 துணை ராணுவ படைப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு அதிகாரி பணியிடங்கள் வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி 5 துணை ராணுவப் படைகளிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
 
அதன்படி சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., ஐ.டி.பி.பி, மற்றும் எஸ்.எஸ்.பி. ஆகிய 4 படைகளும் தங்களது கருத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துவிட்டன. பாலின சமத்துவ கொள்கையை பின்பற்றுவதால் திருநங்கைகளை அதிகாரிகளாக எடுத்துக்கொள்ள தயாராக இருப்பதாக அந்த படைகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், திருநங்கைகளை பணியில் அமர்த்துவது குறித்து விவாதிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என சி.ஐ.எஸ்.எப். தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழிலக பதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்), இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி.), சஹஸ்த்ர சீமா பால்(எஸ்.எஸ்.பி) ஆகிய 5 துணை ராணுவப் படைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : CISF ,forces , Transgender, Official Service, Armed Forces, CISF
× RELATED சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட்...