சுரண்டை: தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் தாலுகா சுரண்டை அடுத்துள்ள மருக்கலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சீவலசமுத்திரம் கிராமத்தில் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. நேற்று அங்குள்ள குளத்து கரையோரம் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் இரண்டு அடி ஆழம் தோண்டிய போது புத்தரின் முக அமைப்பு கொண்ட நூற்றாண்டை கடந்த கற்சிலையின் தலை மட்டும் கிடைத்துள்ளது. அந்த சிலை முக அமைப்பில், நீண்ட காதுடன் இருந்தது. அதன் அருகில் மண்பாண்ட ஓடுகள் கிடந்துள்ளன. இதுகுறித்து உடனடியாக மருக்கலாங்குளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.