வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை மீட்க தனி விமானம் அனுப்பி வைக்க கோரிக்கை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் இணைய வழி ஆர்ப்பாட்டம்!!!

கடலூர்: கொரோனா பொது முடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை, தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இணைய வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். நெய்வேலியில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடி ஆர்ப்பாட்டம் செய்த அவர் பல மாதங்களாக ஊர் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க தனி விமானம் அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த முழு முடக்கம் காரணமாக இரயில் சேவைகள், பேருந்து போக்குவரத்துகள், கப்பல் சேவைகள் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், தமிழகத்திலிருந்து பணிக்காக வெளிநாடுகளுக்கு சென்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அங்கேயே வேலையின்றி, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஒவ்வொரு நாளும் போராடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க தனி விமானம் அனுப்ப வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த இணைய வழி ஆர்ப்பாட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர் நலசங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: