கார் மோதிய விபத்தில் 64 வயது முதியவர் உயிரிழப்பு..: இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசால் மெண்டிஸ் கைது!

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குசால் மெண்டிஸ் கார் விபத்து காரணமாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான இலங்கை பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ்  தனது காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயது முதியவர் மீது மெண்டிஸ் கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் இந்த விபத்து நிகழ்ந்தது. கைது செய்யப்பட்ட குசால் மெண்டிஸ் இன்று மேஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

காவல்துறையின் முதல் அறிக்கையில், குசால் மெண்டிஸ் அல்லது விபத்தில் உயிரிழந்த முதியவர் மது அருந்தியிருந்தார்களா என குறிப்பிடப்படவில்லை, என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய குசால் மெண்டிஸ் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார். கோவிட் 19 லாக் டவுனுக்குப் பிறகு தேசிய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்தியாவுக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டது உட்பட இலங்கையின் சர்வதேச தொடர்கள் கொரோனாவினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை விபத்தில் இவர் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: