கோவை: கொரோனா பாதிப்பை காரணம் காட்டி ஐ.டி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஐ.டி. ஊழியர்கள் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றிவரும் நிலையில், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐ.டி. ஊழியர்கள் கடும் மனஉளைச்சலுக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளதாகவும், ஐ.டி. ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்கள் கட்டாய ஆட்குறைப்பு குறித்து தொழிலாளர்கள் நலத்துறைக்கும், தமிழக முதல்வருக்கும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐ.டி. ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அதேபோல கொரோனா பரவல் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை வாங்கும் நிலையில், ஊழியர்களை நேரம், காலம் வித்தியாசம் இன்றி பணியில் ஈடுபட செய்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஊரடங்கை காரணம் காட்டி ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐ.டி நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை எனவும் அந்த சங்கம் மனுவில் வலியுறுத்தியுள்ளது.