×

கொரோனா நோய் தொற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாள் நீட்டிப்பு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

* மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி பகுதிகளில் நாளை (ஜுலை 6) அதிகாலை  முதல் வரும் 12ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

சென்னை: மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர்  மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு  முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை  கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும்  திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு 24.6.2020 அன்று அதிகாலை முதல் 5.7.2020  நள்ளிரவு 12.00 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய் தொற்று குறைந்திருப்பினும்,  கொரோனா நோய் தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி  எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட  கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது 6.7.2020 அதிகாலை முதல் 12.7.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்க  உத்தரவிட்டுள்ளேன்.

இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும். கட்டுப்பாட்டு  பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு  கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள்  வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்த பகுதிகளில் கிருமி நாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை  தடுக்க இயலாது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும்,  பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை  இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும். நோய்  தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற  வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Madurai , Corona, Full Control, Madurai, Full Curfew, Chief Edapadi
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...