×

பணம் இருக்குறதுக்காக இப்படியா? தங்க மாஸ்க் அணிந்த ‘பொன்மகன்’: வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

புனே: புனேயில் தங்கத்திலான மாஸ்க் அணிந்து ஒருவர் வலம் வருவது, சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரை, சகட்டு மேனிக்கு  வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய  வலியுறுத்தப்பட்டாலும், பலர் தங்களால் இயன்ற வகையில் மாஸ்குகளாக துப்பட்டா, ஷால், துண்டு, கைக்குட்டை ஆகியவை கொண்டு தங்களை  பாதுகாத்து வருகின்றனர். ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன மாஸ்க் அணிந்து வலம் வருகிறார். புனே  மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிம்ப்ரி சின்ச்வாட் என்ற பகுதியில் வசிக்கும் ஷங்கர் குரடே,  தன்னை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள  தங்கத்தால் ஆன மாஸ்க்கை உருவாக்கியுள்ளார்.

மெல்லிய ஓட்டைகளைக் கொண்ட அந்த மாஸ்க்கை தயாரிக்க, கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் (ரூ.2.89 லட்சம்) செலவழித்துள்ளார். ஏற்கனவே கைகளில்  கழுத்துகளில் தங்கத்தால் மின்னிக் கொண்டிருக்கும் இவர், தற்போது மாஸ்க்கையும் தங்கத்தில் செய்துள்ளது ‘ஹாட் டாபி’க்காக மாறியுள்ளது. இதுகுறித்து ஷங்கர் குரடே கூறுகையில், ‘நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த தங்க மாஸ்க் உதவுமா? என்பது சந்தேகம் தான். ஆனால், எனக்கு  தங்கத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற ஆசை இருந்ததால், இவ்வாறு செய்தேன். மெல்லிய துளைகள் இதில் இருப்பதால் சுவாசிக்க பிரச்னை  ஏதும் இல்லை’ என்றார்.

ஷங்கரின் தங்க மாஸ்க் குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள், ‘தங்கத்தால் ஆன மாஸ்கால் உங்களுக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர  நோய்த்தொற்றில் இருந்தெல்லாம் காக்காது’ என்றும், ‘காசு, பணம் இருக்கிறது என்பதற்காக, இப்படிெயல்லாம் செய்யலாமா?’ என்றும், ‘மக்கள்  ஆபத்தான நிலையில் இருக்கும் போது, இந்த மாதிரியான ஆடம்பரங்கள் தேவையா?’ என்றும், கேலி கிண்டல் அடித்தும், திட்டியும் பதிவிட்டு  வருகின்றனர்.


Tags : netizens , Money, Gold, Mass, ponmakan, netticankal
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...