பெய்ஜிங்: பேட்மின்டன் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர் லின் டான், ஒலிம்பிக் போட்டி தள்ளிப் போனதையடுத்து விளையாட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த பேட்மின்டன் வீரர் லின் டான் (37). லின் தனது 17வது வயதில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதுடன் தனது பதக்க வேட்டையை தொடங்கினார். அதன்பிறகு பேட்மின்டன் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய லின், உலக சாம்பியன் போட்டியில் 2006, 2007, 2009, 2011, 2013 என 5முறை தங்கமும், 2005, 2017ம் ஆண்டுகளில் வெளிப்பதக்கமும் வென்றுள்ளார். இப்படி 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதுடன் 2008 பெய்ஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 தங்கம், 2வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமல்ல உலக கோப்பையை 2 முறையும் சுதிர்மன், தாமஸ் கோப்பைகள் என சர்வதேச அரங்கில் லின் சாதித்தவை ஏராளம்.
இந்நிலையில் இம்மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் இருந்தார். ஆனால் கொரோனா பீதி காரணமாக பயிற்சி செய்ய முடியாமல் தவித்தார். போதாதற்கு டோக்கியோ ஒலிம்பிக்கும் அடுத்த ஆண்டு ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 3வது தங்கம் வென்று ஓய்வு பெறலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால் போட்டி இன்னும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டதால், தனது ஓய்வை திடீரென அறிவித்துள்ளார். ‘எனக்கு பிடித்த விளையாட்டுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். இந்த 20 ஆண்டுகளில் எனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சியான நேரங்களில், கடினமான தருணங்களில் என்னுடனேயே இருந்தனர். எனக்கு இப்போது 37வயதாகிறது. இனி என் உடல்தகுதி மேலும் என்னை போராட அனுமதிக்காது. அதனால் ஓய்வு பெறுகிறேன். ஆனால் விளையாட்டை ஒருபோதும் விட்டு விட மாட்டேன்’ என்று லின் கூறியுள்ளார்.