நெய்வேலி: என்.எல்.சி தொடர் பாய்லர் விபத்து குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற தேசிய அனல்மின் நிலைய இயக்குனர் மொஹபத்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற விபத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த நிலையில் என்.எல்.சி.நிர்வாகம் சார்பில் உயிரிழந்த 7 பேருக்கும் இழப்பீடு அறிவித்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 30 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.மேலும் காயம் அடைந்தவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இது போன்ற விபத்துகள் நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த மாதம் மே 05-ம் தேதி கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்தும், அதற்கு இரண்டு நாள் கழித்து நெய்வேலி அனல் மின் நிலையத்தின் Phase II, Unit 6 பாய்லர் வெடித்ததில் 5 ஊழியர்கள் உயிழந்தனர். இந்த இரண்டு மாதத்திற்குள் பெரிய அளவில் 3 முறை விபத்துகள் நடந்துள்ளது. இதுபோல கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு சிறிய விபத்துக்கள் அவ்வபொழுது நெய்வேலி அனல் மின்சார நிலையத்தில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தொடர் பாய்லர் விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளதால், தொடர் விபத்து குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற தேசிய அனல்மின் நிலைய இயக்குனர் மொஹபத்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது என்.எல்.சி-யில் 4 அலகுகளிலும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.